அங்கே நூத்தம்பது ரூபாய் அதிகச்சம்பளம்...!


"நூத்தம்பது ரூபாய் சம்பளம் அதிகம்ங்கறதுக்காக....இந்த கடைக்கு வேலைக்கு வந்தது தப்பாப் போச்சு..!" என்று சோமு நினைத்தான் "இப்ப நெனைச்சு என்ன பண்ணறது இம்மாம் பெரிய திருப்பூர்ல வேற கடை கெடைக்கலையா எனக்கு!" என்னடா புலம்புற என்றான் பக்கத்தில் இருந்த குண்டன் சரக்கு வாசம் அவனிடம் அதிகமாக வீசியது கண்கள் இரத்த நிறத்தில் இருந்தது. "வண்ணாரத் தாயே இவனுககிட்ட இருந்து என்னை உசிரோட காப்பாத்து ஆத்தா" என்று மனம் வேண்டியது.

சோமு ஒரு நூல் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான், வாரச்சம்பளம் ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கடைக்கு வரும் ஒரு ஆள் வேறு இடத்தில் வேலை வாங்கித்தருவதாக நூத்தம்பது ரூபாய் அதிகம் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை காட்டவும், தினம் சத்தியமங்கலம் போக வர பஸ் செலவுக்கு ஆச்சுன்னு இந்த வாரம் திங்கக்கிழமையில் இருந்து புதிய கடைக்கு வேலைக்கு வந்தான்.

பழைய கடை போல் இல்லாமல் கண்ணாடி போட்டு மறைச்சு குளுகுளுன்னு ஏசிபூசின்னு கடை இருந்தது வயசுப்புள்ளைகளும் நல்ல செவத்த புள்ளைக நாலஞ்சு வேற இருந்தது. என்னமோ சொர்க்கம் மாதிரி இருந்தது சோமுவுக்கு, பிஸ்கட்டு, டீ, போண்டா, வடைன்னு கவனிப்பு வேற, பழைய கடையில வயசாளி செட்டியாரு பத்து பைசா செலவு பண்ண மாட்டாரு. ஆனால் இங்க ஓனர் கார்த்திக் சின்னப்பையன் ஹீரோ கணக்கா இருந்தாரு. சாயங்காலம் ஆறுமணிக்கு கார்த்திக் பிரண்டுக நாலஞ்சு பேரு வந்து ஒரே கும்மாளமா பேசிக்கிட்டு இருந்தாங்க அவங்க பேச்ச அரசல்புரசலா கேட்டதுல கார்த்திக் அந்த வழியா போகின்ற ஒரு டீச்சரை காதலிக்கின்றான் என்று தெரிந்தது. ஒரு நாளைக்கு அந்த டீச்சர் புள்ளைய பாக்கோணும் என்று சோமு நினைத்துக் கொண்டான்.

ஒரு நாள் அதற்கான சந்தர்ப்பம் அமைந்தது, கொரியர் அனுப்பிட்டு திரும்பி வரும் போது, சந்துல இரண்டு பேரும் பேசிட்டு இருந்ததைப் பார்த்தான் புள்ள நல்லா செவப்பா இலட்சணமா இருந்திச்சு, கார்த்திக்கு ஏத்த ஜோடிதான்னு சோமு நினைத்துக் கொண்டான்.

எதிர்பாராத ஒரு நாள் அந்த புள்ளைய கூட்டிக்கிட்டு ஓடிப்போயிட்டான் கார்த்திக். அந்த புள்ள ரொம்ப பணக்கார வூட்டுப் புள்ள போல....சாதியும் வேற! இரண்டு அம்பாசிடர் கார்ல குண்டுகுண்டா ரவுடிகளை ஏத்திக்கிட்டு வந்த அந்தப்புள்ளையோட அண்ணங்காரன். விசயம் தெரியாம கடைக்கு ஏதோச்சையா வந்த கார்த்திக் பிரண்டு லட்சு என்கின்ற லட்சுமணனை எங்க போயிருக்காங்க என்று கேட்டு பின்னி பெடலெடுக்கறாங்க...அவன் அடிதாங்க முடியாம சோமுக்கு தெரியும்ன்னு உளற...சோமுவுக்கு ஏழ்ரை ஸ்டார்ட் ஆச்சு இரண்டு பேர் சோமுவைப் பிடித்துக் கொள்ள ஒரு வயசான ரவுடி ரொம்ப ஒல்லியா இருந்தான் அவன்தான் தலைவன் போல....புல் மப்புல நிக்கமுடியாம இருந்தான்.

"யார்ரா...இவன்? கரிச்சட்டிக்கு காட்டன் சட்டை போட்ட மாதிரி...! இரண்டு பேரும் எங்க ராஸ்கல் சொல்லு இல்ல மூக்குல குத்திருவேன்" என்ற படி கை ஆடி...ஆடி....சரியாக கண்ணைக் குத்தினான்.

"யோவ்...! நீ நல்லா இருப்பே கண்ணை கெடுத்திறாதைய்யா....! ஒண்ணு செய்யு கண்ணைக் குத்துறேன்னு சொல்லிட்டுக் குத்து அப்ப கரைக்ட்டா மூக்குல குத்துவே" என்றான் சோமு.

"ராஸ்கல் எகத்தாளமா.....என்றாலும் பெருசு சோமு சொல்லியபடி "கண்ணைக் குத்திருவேன் ஒழுக்கமாச் சொல்லு" என்று சரியாக வாயில் குத்தியது!

பாவம் சோமுவை அவங்கப்பன் முத்துச்சாமி கூட கை நீட்டி அடிச்சதில்லை.....! அடிக்கிற அளவுக்கு அதுவும் ஒர்த் இல்லை குடிச்சிட்டு ஊர்ல அப்பாவியா இருக்கிறவனா பாத்து ஒரண்டையிழுக்கும் அவனும் "யோவ்....!" அப்படின்னு எகிருனா "சார்..! நீங்க போங்க சார்...! அப்படின்னு பம்பும்...! 

ஒருத்தன் லட்சுவின் மூஞ்சியில் சிகரட்டை ஊதினான்....! "அண்ணே...! இந்த சரக்கு அவ்வளவு கிக் இல்லை இத ஏண்ணே குடிச்சே...?" என்று வாடையை வைத்தே சரக்கை  கண்டுபிடித்து அட்வைஸ் செய்தான். கடுப்பான அவன் இடுப்பைக் கிள்ளினான் சூழ்நிலை மறந்து அவன் கிள்ளியது கிச்சுகிச்சு மூட்டியது போல் இருக்க ஹ...ஹ.....ஹ....என்று சிரித்தான்! ஒரு அடி ஜம்ப் செய்து மண்டையில் நங்கென்று கொட்டு வைத்தான் அவன் லட்சு மிக கேவலமாக நாய் மாதிரி ஊளையிட்டான்.

சோமு பாத்தான் விட்டா இவனுக அடிச்சே ஒரு பக்க ஒரண்டைய கழட்டிடுவாணுக அப்படின்னு நினைச்சு பழனிக்கு போயிருக்காங்க.......என்றான். தூக்கி கார்ல போட்டுகிட்டு பழனி போறாங்க....! மணி எட்டு இருக்கும் லட்சுவையும், சோமுவையும் நடுவில் போட்டு இரண்டு புறமும் இரண்டு குண்டன்கள் உக்காந்து கொள்ள கார் கொடுவாய் தாண்டி போகுது, பழனியில யாரு வீட்டுக்குடா போறாங்க....என்று கேட்கறான் புள்ளையோட அண்ணன். கார்த்திக் ஒருமுறை நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது பழனியில் தன்கூடப் படிச்ச தன்ராஜ் இருப்பதாகவும் அந்த புள்ளைய கூட்டிட்டு ஓடுனா அங்கதான் போவேன்னு அரசல்புரசலா காதில் விழ சோமு அடியில் இருந்து தப்பிக்க சொல்லிவிட்டான். லட்சுவை தன்ராஜ் வீடு தெரியுமாடான்னு கேட்டதுக்கு தெரியும்ன்னு சொல்ல கார் பழனி நோக்கிப் பறந்தது.

நல்ல பனி காலம் வேற சரக்கு வேற ஓசிக்குடி குடிச்ச குண்டனுகளுக்கு ஒன்னுக்கு முட்டிக்கிட்டு வரவும், ஒரு இருட்டுக்குள்ள காரை நிறுத்தி ஒரு குண்டனை மட்டும் காவலுக்கு வச்சுட்டு ரோட்டோரம் ஒன்னுக்கடிச்சிட்டு இருந்தாணுக...சோந்து படுத்துகிட்டு இருந்த லட்சு பாத்தான் அந்த குண்டன் தம் அடிச்சிட்டு அசால்ட்டா நிக்கவும் காரை விட்டு இறங்கி அவன் உயிர்நாடியில் முட்டியை மடக்கு ஒரு உதைவிட அவன் 'ஹஸ்புக்' என்று வினோதமான ஒலியெழுப்பி கீழே விழுந்தான்.

கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி ஒரே ஓட்டமா காட்டுக்குள்ள ஓடிப்போனான். சோமுக்கு கெதக்குன்னுச்சு அவன் கிடைக்கலைன்னா நம்மளை மறுபடியும் குமிய வச்சு கும்முவாணுக அப்படின்னு யோசனை பண்ணி அவன் ஓடிய எதிர் திசையில் காட்டுக்குள்ள ஓடினான். கொஞ்ச தூரம் வேகமா ஓடி ஒரு நல்ல புதர்க்குள்ள போயி ஒளிஞ்சிக்கிட்டான், அவங்களும் ரொம்ப நேரம் காட்டுகுள்ள தேடுனாங்க, சோமு பாங்காட்டு ஆசாமிங்கறதால நல்லா வங்குப்புதராப் பாத்து ஒளிஞசிக்கிட்டான், காருக்குள்ள இருக்கிற ஒரு சின்ன டார்ச்லைட் வச்சு தேடிப்பாத்தாங்க, அப்பவும் அகப்படலை...லட்சுவும் எங்க போனான்னு தெரியலை....விடிய...விடிய...அங்கியே கிடந்தான் சோமு. அவர்களும் தேடிதேடி வெறுத்துப் போயி திருப்பூர்க்கு திரும்பி போயிட்டாங்க...! ரோட்டுக்கு வந்து ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி லிப்ட் கேட்டான் சோமு. திருப்பூர் மார்க்கெட் போற ஆட்டோங்கறதால அதில் திருப்பூர் வந்து சேந்தான். பஸ் ஸ்டேன்ட்டில் கடை வச்சிருக்கும் ஊர்க்காரர் மாணிக்கத்திடம் கொஞ்சம் காசு வாங்கிட்டு ஊருக்குப் போனான்.

                                                                            ***

சோமு பத்து பதினைஞ்சு நாள் கழிச்சு திருப்பூர் வந்தான். இனி அங்க வேலைக்குப் போவக் கூடாது, சம்பள பாக்கி மட்டும் வாங்கிட்டு, வேற கடை பாக்கோணும், இல்ல செட்டியார்கிட்டியே மறுபடியும் போயிறணும். என்ற படி விடியக்காலையில் எழுந்து வந்திருந்தான்.

தூரத்தில் இருந்து பார்த்தான், கடை திறந்து இருந்தது, பிரச்சனையெல்லாம் ஓஞ்சு போச்சு போல..."வக்காலிக இவனுக சரக்குக்கு நம்மள ஊறுகா ஆக்கிட்டாங்க என்னா அடி....யம்மா! இன்னியோட இந்தக் கடை வாசல்ல தல வச்சுப் படுக்கக்கூடாது" என்று மனதில் நினைத்தபடி கடைக்குள் நுழைந்தான் இவன் தலயப் பாத்ததும் கார்த்திக் சிரித்தான், கொஞ்சம் வெளுத்து உடம்பு பூசியிருந்தது, பயபுள்ள நல்லா ஜாலியா இருந்திருப்பான் போல, நாமதான் மிதிபட்டோம் கடுப்புடன் சிரிக்கவில்லை சோமு.

"என்னண்ணா ரொம்ப அடிச்சிட்டாங்களா...? சாரிண்ணா....!" என்றான்.

"சரி...சரி...வுடுங்க....என் சம்பள..." பேசி முடிக்க வில்லை கார்த்திக், "கவிதா இங்க சீக்கிரம் வா...."!என்று அழைத்தான். "ஓ......அந்த டீச்சர் புள்ள இங்க கடையிலதான் இருக்கா...?" என்று நினைத்தான் சோமு அந்தப் புள்ள புதுசா மினுமினுக்கும் மஞ்சத்தாலியுடன் வந்து நின்றது இருவரும் ஜோடியாக காலில் விழுந்து  "வீட்டுக்கு நான் ஒரே பையன் என் அண்ணனா ஆசிர்வாதம் பண்ணங்கண்ணா" என்றான் கார்த்திக் சோமுவுக்கு என்னவோ போலாகிவிட்டது "நல்லாயிருங்க.....நல்லாயிருங்க..."என்றான் 

"சோமண்ணா மத்தியானம்  எங்க வூட்டுலதான் சாப்பாடு! ஓட்டலுக்கு போக வேண்டாம்" என்றார்கள். "சரி நீங்க கடைய பாத்துகங்க, நான் கவிதாவை வீட்டுல விட்டுட்டு வந்திடுறேன், பத்து நாளா நீங்க இல்லாம ஒரு வேலையும் ஆகலை" என்று சொல்லிவிட்டு பைக்கில் பறந்து போனார்கள். சோமு எதுவும் புரியாமல் கொஞ்ச நேரம் நின்று விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தான். அவன் மனதில் வேலையை விட்டு நிற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.....!
Tuesday, May 21, 2013
Posted by வீடு சுரேஸ்குமார்

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ...?


இது கொஞ்சம் அசைவப் பதிவு கலாச்சார காவலர்கள் அப்பீட்டு!


மீபமாக வெளிவந்து வெற்றிகரமாக?! ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் திரைப்படத்தில் நாயகனின் பெயர் "குஞ்சிரபாதம்" இந்த பெயர் அவனை சங்கடப்படுத்துகின்றது என்பதால் தன்னுடைய பெயரை 'ஹரிஷ்' என்று மாற்றிக் கொள்கின்றான். ஆனால் ஊர்ப்பெயரே இப்படி இருந்தால்...? அவனின் நிலை என்னவாகும்..! தன் பெயரை மாற்றிக் கொள்ளலாம் ஊர்ப்பெயரை மாற்ற முடியுமா..? "சின்னக்கவுண்டன்பாளையம்" என்கின்ற ஊர்ப் பெயரை கலைஞர் ஆட்சியில் "சின்னப்பாளையமாக" மாற்றியமைத்தது போல எதாவது நடந்தால்தான் உண்டு. ஆனால் அம்மா ஆட்சியில் மீண்டும் "கவுண்டன்" வந்து ஒட்டிக்கொண்டது வேறு விசயம். அத வுடுங்க அது அரசியல்! நாம மேட்டர்க்கு வருவோம்!

நான் வேலை பார்த்த ஒரு இடத்தில் செந்தில் என்று ஒருவர் இருந்தார். வேலை செய்யுமிடத்தில் தன்னுடைய ஊர் அரியலூருக்குப் பக்கத்துல ஒரு கிராமம் என்று சொல்லி வைத்திருக்கின்றார். அவருடைய கெட்ட நேரம் ஊர்க்காரர் ஒருவர் செந்திலைப் பார்க்க அலுவலகம் வர இருவரும் சூழல் மறந்து பேசிக்கொண்டிருந்ததை அனைவரும் கேட்டதில் அவர் ஊர்ப்பெயர் "குஞ்சுவெளி" என்பதை அறிந்துகொண்டார்கள்.

அடுத்தநாள் செந்திலை "ஏம்ப்பா... உங்க ஊர்காரங்க பேண்ட்ல ஜிப்பே வைக்க மாட்டாங்களா...? அதனாலதான் இப்படி ஊர்ப் பேரா..?'' என்று கேட்டு அவமாணப்படுத்தினார்கள். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களிடம் நாங்க "சார்கிட்ட உங்க ஊர்ப் பேரு என்னன்னு கேட்டுட்டு வாங்க" என்று சொல்லிவிடுவோம். அவர்கள் கேட்டதும் செந்திலுக்கு கண்கள் சிவக்கும், பிறகென்ன எங்களை வண்டவண்டையாக திட்டுவது வாடிக்கையான வேடிக்கையாகிப் போனது. 

இதுல பாருங்க பாரதியார் பாட்டு எல்லாருக்கும் உத்வேகத்தைக் கொடுக்குன்னா, இவருக்கு கொலைவெறியக் கொடுக்கும்! ஆமா! இந்த பதிவு தலைப்பையே சாதாரண விசயத்திற்கு உதாரணமா சொல்லுவோம் எறும்பு கடிச்சிட்டாக் கூட "இங்க பாருங்க சின்ன எறும்பு! 70கிலோ ஆளை கடிச்சா என்ன பாடுபடுறோம்...!" அப்படிம்பாரு ஒருத்தர், உடனே இன்னொருவர் "தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" அப்படிம்பார்.

"செந்தில் சார் நான் வண்டியில வந்துட்டு இருந்தேன், ஒரு கோழிக்குஞ்சு மேல வண்டிய விட்டுட்டேன்! அது கொடலே வெளிய வந்திருச்சு" இப்படின்னு சில பேர் வெறியேத்துவாங்க...! சில பேரு "அடேங்கப்பா எவ்வளவு பெரிய காக்கா குஞ்சு வெளிய" அப்படிப்பாங்க..! 

ஜூராசிக்பார்க் படம் பார்த்துட்டு வந்த டீக்கடைப்பையன் என்கிட்ட  கதை சொல்றான் "சார்....! ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ய டைனேசர் சார்...! முட்டை போடுது சார்..! அதிலிருந்து டைனேசர் குஞ்சு வெளிய வருது சார், "இல்ல தலைதானே முதல்ல வெளிய வரும்" இது நான். "சார் நான் குட்டின்னு சொன்னேன் சார்..!" கடுப்பான செந்தில் "டேய் ஓட்ரா....!" என்று அவன் பொடனியில் அடிக்க "போய்யா குஞ்சுவெளி" என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

இந்த நேரத்தில் வேலைக்கு வந்த மலையாளி பையன் உன்னிக்கிருஷ்ணன் வயநாட்டைச் சார்ந்தவன், தமிழ் சுத்தமாக தெரியாது தட்டுத் தடுமாறி கொஞ்சம் தமிழ் பேசக் கற்றுக் கொண்டான், எங்க ஆபிஸ்ல ஒரு டிவிஎஸ் 50, பஜாஜ் கம்பனியின் "Sunny" என இரண்டு வண்டி இருந்தது அதன் பெயரை அவன் எந்த வித கூச்சநாச்சமின்றி அழைப்பது செந்திலை கிண்டல் செய்வது போலவே இருந்தது.

எங்க ஓனர் சிவகாசிக்காரர் அவர் காலையில் வந்தவுடன் 'உன்னி'க்கு ஒரு வேலை கொடுக்கிறார், 

"அண்ணாச்சி நம்ம "Sunny" ரிப்பேர் ஆச்சு!  ஸ்டார்ட் ஆக மாட்டிங்குது!" 

"எண்ணை எரங்கலையோ நல்லா பாத்தியாடா..? டூப்பு அடைச்சிருக்கும்" 

"அண்ணாச்சி நல்லா ஞான் ஸ்டார்ட் செஞ்சும் ஆகலையில்லோ"

"கவுத்து படுக்கப் போட்டுப், பிறகு எடுத்து ஸ்டார்ட் பண்ணுடா ஆவும்" 

"ஆகலை அண்ணாச்சி "Sunny"-ய சர்வீஸ் விடணும்" 

"சரி அப்புறம் விட்டுக்கலாம் டிவிஎஸ் எடுத்துட்டு போ அப்படிங்கிறார்...." 

இந்த உரையாடல் ஆபிஸ்ல இருக்கிற ஆண்கள் விழுந்து..விழுந்து சிரிக்கிறாங்க....! பெண்கள் கூச்சத்தில் நெளியிறாங்க....! அதை கவனித்த அண்ணாச்சி "எலேய்...! இவனை மொதல்ல பஜாஜ் கம்பனி வண்டிப் பேரச் சரியா சொல்ல சொல்லுங்கடா...! எழவு எடுக்கவே கேரளாவில் இருந்து வராணுக" என்றார். ஆனால் அதே ஓனர் உன்னிகிருஷ்ணன் தம்பி குஞ்நுண்ணியையும் வேலைக்கு சேர்த்துக் கொண்டார் என்பது வேறு விசயம். இவங்க இரண்டு பேரையும் மாறி மாறி எல்லாரும் கூப்பிட வேலையை விட்டு ஓடியே போனார் செந்தில்.

"பிடிக்காத என்
பெயரை மாற்றிய
பின்னும்...
சாலையில்,
அஞ்சலகத்தில்,
வங்கியில்,
சிற்றுண்டிச் சாலையில்,
என யாராவது என் பெயரழைத்து
கூவும் போது
அனிச்சையாக
திரும்பிப் பார்க்கின்றேன்!"

Sunday, May 12, 2013
Posted by வீடு சுரேஸ்குமார்

ஏனுங்க...கொஞ்சனேரம் தூங்கறேனுங்க மெட்ராஸ் வந்தா எழுப்புங்க....!


சோலையம்மா போன்ற பல படங்களை தயாரித்த கள்ளிப்பட்டி ஜோதி கனவு தொழிற்சாலையில் கையைச் சுட்டுக்கொண்டதால்... சென்னையை விட்டுச் சிறிது காலம் சொந்த ஊரில் குடும்பத்துடன் வந்து வசிக்கத் தொடங்கினார். அவருடைய மகன் எங்க பள்ளியில் வருடத்தின் நடுவில் புதுப்பையனாக சேர்ந்து படிக்க தொடங்கினான், அவனுடைய நட்பும், ஏழாவது பாட புத்தகத்தில் வந்த தலைநகரம் பற்றிய பாடமும், எனக்குச் சென்னை என்கின்ற நகரத்தையும், அதன் பிரம்மாண்டத்தையும், கனவு காண வைத்தது. நான் சென்னைக்கு வாழ்நாளில் ஒரு நாளாவது செல்ல வேண்டும் என்கின்ற ஆவலை ஏற்படுத்தக் காரணம் கடலும், ரயிலும்.

எங்க மாவட்டத்தில் ஈரோட்டைத் தவிர ரயிலை எங்கும் பார்க்க முடியாது, ரயில்ப் பாதையே இல்லாத மாவட்டம் எங்களுடைய மாவட்டம். இரண்டாவது நீர் பிரமாண்டம் கடல். ஏரி, குளம், வாய்க்கால் என்று திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீராக இருக்கும் தண்ணீர் தேசம் எனது ஊர் என்றாலும், கடல் பார்க்க வேண்டும் என்பது கனவு.

முதன் முதலாக திருப்பதி ரயிலில் சென்ற போது ரயில் என்பது இரைச்சல் மிகுந்த ஒரு இரும்புத் தொட்டில் என்று புரிந்து கொண்டேன். பலமுறை சென்ற பிறகு அது ஒரு மனிதன் பயணிக்கும் குப்பைத் தொட்டி என்று புரிந்து போனது. தேனீர் விற்பவனின் சத்தம், குழந்தை அழுகுரல், பெண்களின் பேச்சு, குடிகாரர்களின்  அரசியல் பேச்சு என்று இல்லாமல் அடிக்கடி தடதடக்கும் தண்டவாள உரசல் என ரயில் சீக்கிரம் வெறுத்துப் போய்விட்டது.

கடலினை முதன்முதலாக கேரளாவின் அரபிக் கடலின் கரையில் கால் நனைத்தபோது... காலின் கீழே மணல் நகருவது இந்த பூமியே நகருவது போன்ற ஒரு பிரமை. சிறுஅலை, பெருஅலை என்று கால் நனைந்த போது ஏற்பட்ட ஆனந்தம். இந்த பிரபஞ்சமே பாதிக்கு மேல் கடலால் நிரம்பியிருக்கின்றது அதன் துளியை ஸ்பரிசித்த ஒரு கர்வம். ஒரு கிராமத்தானாக கடல் அன்னையை தரிசித்த பெருமை! என்று இருந்த கடல், ஊர் திரும்பிய போது உப்புத் தண்ணீரால் கால் அரித்த போது கடல் என்பது ஏரி, குளம் போல் கிடையாது என்பது புரிந்தது. 

சென்னை சென்ற போது மெரினா பீச்சின் காற்றும், உப்பு, மிளகு தூவிய கடல் மீனும், ஆங்காங்கே மடியில் படுத்துக் கொஞ்சும் காதலர்களும், குடும்பம் குடும்பமாக வரும் கிராம மக்களும், எம்.ஜி.ஆர் சமாதியில் காதுவைத்துப் பார்ப்பதும், எல்லாமே ஒரு வினோதமான உலகமாக தெரிந்தது. சென்னை மொழியும் ஒரு வித்தியாசம்தான் வார்த்தைக்கு வார்த்தை மரியாதை சொற்களை பயன்படுத்திய எங்களுக்கு ஒரு சின்னப்பையன் கூட "இன்னாப்பா" என்பது ஒரு ஆச்சர்யம்தான். இந்த உலகம் ஆச்சர்யங்கள் நிறைந்தது என்பதை கடலும் ரயிலும் மட்டுமல்ல சென்னையும் எனக்குப் புரிய வைத்தது.

சென்னை நண்பர் ஒருவர் எங்களோடு வேலை பார்த்த போது "என்னப்பா இது இந்த ஊர்க்காரங்க இவ்ளவ் மரியாதை கொடுக்குறாங்க கூச்சமா இருக்கு எனக்கு" என்றார் அவர் பெயர் 'ராமதாஸ்' "ஏங்க ராமதாசுங்க....சாப்பிட்டிங்களாங்க..." என்று வார்த்தைக்கு வார்த்தை மரியாதை தரும் ஊரில் மிகவும் சிரமப்பட்டார். பிறகு பழகிய பிறகு அவரும் "ங்க" போட்டு பேச ஆரம்பித்துவிட்டார் விடுமுறையில் ஊருக்குப் போயிட்டு திரும்பி வந்தவுடன் "இன்னாப்பா எங்க ஊருக்கு போனாலும் இந்த மரியாதை வந்து தொலையுது எல்லாரும் பேஜாரா பாக்குறாங்கப்பா...!" என்று புலம்பினார்.

எனக்கு சென்னை ஓர் ஆச்சர்யம்! அவருக்கு திருப்பூர் ஒரு ஆச்சர்யம்!. ஒவ்வொருவருக்கும் ஒரு ஊர் ஆச்சர்யம். இங்கு அவர் வந்த வேலை முடிந்து மீண்டும் சென்னை திரும்பிய போது 'இவ்வளவு நல்ல ஊரை விட்டுப் போவது எனக்கு பிடிக்கலை' என்று நெகிழ்வாகத்தான் கிளம்பினார். ஆனால் எனக்கு சிறிய வயதில் ஏற்பட்ட சென்னை மீதான பிரம்மாண்டம், ஆச்சர்யம் திருப்பூரின் மேல் எப்பொழுதும் இருந்ததில்லை அது ரயில் மீதான காதல் போலத்தான்.

“ஒண்டுக்குடித்தனம்,
புறாக்கூண்டு
மேன்சன்,
'பேய்' வேகத்தில் வரும்
ஆட்டோவிலிருந்து
தப்பித்தல்,
'மீன்பாடி' வண்டியில்
உயிர்பிழைத்தல்,
'நகர பேருந்து' நெரிசலில்
'பர்ஸ்' பாதுகாத்தல்,
உப்புத் தண்ணீர்
குளியல்...,
அறைகளில் தங்க
விருந்தினர்களை அனுமதிக்காத
வீட்டு உரிமையாளர் -என
வாழும் எங்களை விட
நிலாவில் கால் வைத்த
'ஆம்ஸ்ட்ராங் 'என்ன
பெரிய கொம்பா...?”
Wednesday, May 8, 2013
Posted by வீடு சுரேஸ்குமார்

என்பிலதனை வெயில் காயும்!




''உசிர் போயிருச்சு கண்ணு…….!''

ரங்கசாமி தாத்தா சொல்லிவிட்டு வீட்டுப் படியிறங்கி தளர்வாக நடந்து போனார், சொல்லும் போது அவருடைய கண்கள் கலங்கியிருந்தது. பால்ய நட்பு அவருக்கும் எங்க அப்பாவுக்கானது, எங்க அம்மாயின் கடைசி தம்பி அவர் இருவருக்கு சம வயது. எங்களுக்காக உறவாடாமல் இருந்தார்….இன்று உயிர் போனவுடன் "தானாடா விட்டாலும் தன் சதையாடும்" என்பதைப் போல காரியத்துக்கு போகின்றார். அவரை நான் தடுக்க விரும்பவில்லை!

எங்க அப்பா எங்களுக்கென்று தூணாக இருந்ததும் இல்லை; நாங்க அவருக்கு பாரமாக இருந்தும் இல்லை, எல்லாருக்கும் முதல் ஹீரோ அப்பாதான் ஆனால் எங்க அப்பா நிஜ ஹீரோ……! ஆமாம் நல்ல பிராமணச் சிகப்பு, மடிப்புக் கலையாத வெள்ளை முழுக்கைச் சட்டை, இரட்டை மடிப்பு பாலியஸ்டர் வேஸ்டி என கையில் பிரம்பு பள்ளி வரந்தாவில் நடந்து வந்தாலே பள்ளியே அமைதி காக்கும்! பாடம் நடத்துவதில் அவ்வளவு சிறப்பு பள்ளியில் சிரித்து நான் பார்த்தில்லை, ஆனால் வீட்டில் தோழனைப் போல் எங்களுடன் விளையாடுவார்…., கறி பெண்களைப் போல் மிளகு அம்மியில் அரைத்து கைப்பக்குவத்துடன் செய்வார்….வாசம் ஊரே மணக்கும்.

கைவசம் பல கதைகள் அவரிடமிருக்கும். வெயில் காலங்களில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு அப்பாவின் மார்பில் இருக்கும் அடர்த்தியான முடிகளை நிரவியபடி மெத்தை போல படுத்துக் கொண்டு கதை கேப்பேன்…! அப்படியே தூங்கி விடுவேன்…! திடகாத்திரமான அந்த மார்பு இன்று எலும்பு தெரிய இருக்குமா…? மூப்பு அந்த அழகை சிதைத்து விட்டிருக்குமா…? பழைய முகம்தான் மனதில் இருக்கின்றது இன்றைய முகம் எப்படியிருக்கும்....? அப்பாவுடன் பேசி கிட்டத்தட்ட 24 வருசம் ஆச்சு...! நான்கு ஜந்து வருடங்களுக்கு முன் ஒரு முறை ஒரு கோயில் விழாவில் பார்த்தது. பழைய கம்பீரம் இழந்து, முடி நரைத்து, வழுக்கை விழுந்து, தோல் சுருங்கி....நான் பேச மாட்டேனா...? என ஏங்கினார் நான் பார்ப்பதை கூடத் தவிர்த்தேன்.

அவருடைய அழகுதான் எங்க அம்மாவை இவரைத்தான் கட்டிக்கணும் என்று அடம் பிடிக்க வைத்திருக்குமா...? அம்மா இன்னிக்கு உயிரோடு இருந்திருந்தா.....?நான் படுத்துறங்கிய அந்த மார்பில் புரண்டு...புரண்டு...அழுதிருப்பேனோ...! இருக்கலாம்!

அம்மா கையில் ஆனந்தவிகடன்! கண்களில் நிரந்தர கண்ணாடி, குடை சகிதம் பள்ளிக்கு வருவார்... தமிழ் இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஆசிரியர் குழுவில் என் அம்மா பேர் இருக்கும், மாதம் ஒன்றிரண்டு கவிதைகள் ஆனந்தவிகடனில் வந்துவிடும், புத்தகப் பிரதி தபால்காரர் கொண்டு வந்த பிறகு அதைக்காட்டி பெருமைப்படுவார்கள். மாலை பள்ளி பியூன் அனைத்து ஆசிரியர்களுக்கும் டீயும், கேக்கும் கொண்டு வந்து கொடுத்தால் எங்க அம்மாவின் கவிதை ஏதோ புத்தகத்தில் வந்திருக்கின்றது என்று அர்த்தம். சில சமயம் கோகுலத்தில் குழந்தை கதைகள், பாடல்கள், எங்க அப்பாவிக்கு கவிதை, எழுத்து கிலோ என்ன விலையென்று கேட்பார். துக்ளக் படிப்பார், இல்லை தினத்தந்தி பெரிய...பெரிய...ஆங்கில புத்தகங்களை புரட்டிக் கொண்டிப்பார் சில சமயம், தமிழ் புத்தகங்களை பெரும்பாலும் படிப்பதில்லை...!

இருவரும் அன்பாகத்தான் இருந்தார்கள் கமலா டீச்சர் வரும் வரை. பள்ளிக்கு மாற்றலாகி வந்த கமலா டீச்சர் புருசனை இழந்தவர். தனியாக வீடு எடுத்து தங்கி பள்ளிக்கு வேலைக்கு வந்து கொண்டிருந்தார்....சகஜமாக பேசத் தொடங்கிய நட்பு அடிக்கடி இரவு அப்பா காணமல் போனார், நானே பலமுறை பார்த்திருக்கின்றேன் கமலா டீச்சர் வீட்டின் முன் எங்கப்பாவின் பச்சை நிற அட்லஸ் சைக்கிள் நின்று கொண்டிருந்தை அந்த வயதில் புரியவில்லை.

அழுதாள், சண்டை போட்டாள்....அப்பா மயிரைப் பிடித்து அடித்தார் அமைதியான கூட்டை மந்தி கலைத்தது போல... தினமும் சண்டை ஒரு நாள் நான் விளையாடி விட்டு வந்த போது மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்துக் கொண்டாள் அம்மா...! ஊரே எங்க வீட்டுக்கு முன்னாடிதான் நின்றது, கருகிய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த உடலை மருத்துவமணையில் இரண்டு நாள் வாழையிலை போர்த்தி வைத்திருந்தார்கள்....! ஒரு நடுஇரவில் எங்க அம்மாயின் ஓலம் அம்மாவின் மரணச் செய்தி அறிவித்தது அந்த ஏழு வயதில் அழக் கூடத் தோணவில்லை...!

அடுத்த சில ஆண்டுகள் அம்மா இல்லாத கவலை அம்மாயின் அரவணைப்பும் தாத்தாவின் அன்பும் மறையச் செய்தன! ஊர்க்காரர்கள் உங்கம்மா ஊருக்கே அறிவு சொல்றவ.....! இப்படி அறிவு கெட்டத்தனமா பண்ணிட்டாளே என்று அழுதார்கள், திண்டுக்கல் கஸ்தூரிபா கிராமத்தில் ஆசிரியர் பயிற்சி செய்த போது திமுகவினரின் மகள் என்பதை தெரிந்த கல்லூரி நிர்வாகம் வெளியேற்றிய போது இங்கிருந்து சென்று ஊர் காங்கிரஸ் பிரமுகர்கள் எங்க ஊர்ல மாவட்ட அளவில் முதலிடம் எடுத்த முதல் பெண் என்பதை கூறி ''அந்தப் பிள்ளை படிப்பில மண்ணைப் போடாதிங்க..!'' என்று கூறி மீண்டும் சேர்த்துக் கொண்டார்கள். அப்படியெல்லாம் படிச்சது தீயில் வெந்து சாவதற்கா...? என்று அழுதார்கள். ஏழை சனத்திற்கு சாதி தெரியாது! கிராம சனத்திற்கு எல்லாம் நம் பிள்ளை என்கின்ற பாசம்! அந்த அன்பு எத்தனை கோடி கொட்டினாலும் கிடைக்காதது.

திடீரென்று எங்கப்பா ஒருத்தியை தாலிகட்டிக் கூட்டிக்கிட்டு வந்து விட்டார் அறிவு பெட்டகம் எங்க அம்மா இருந்த இடத்தில அஞ்சாவது படித்த ஒருத்தி மனம் ஒப்புக் கொள்ளவில்லை..! திருமணத்தை ஏற்றுக் கொண்ட எங்கள் தாத்தா என்னையும் அவர்களுடன் அனுப்பினாள் தாயன்பிற்காக...! அம்மாவின் இடத்தை கடவுளாலும் நிரப்ப முடியாது....! ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் தாத்தா, அம்மாயை தேடி வந்தவன்தான் இதுவரை அப்பாவிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை.....!

கிழவனும்...கிழவியும் மிகவும் சிரமத்தில் எங்களைப் படிக்க வைத்தார்கள் அவர்களின் ஏழ்மையறிந்து படிப்பை விட்டுவிட்டு வேலைக் போகத் தொடங்கினேன்...எந்த துன்பத்திலும் எங்கப்பா எங்களை வந்து பார்க்கவேயில்லை தன் மனைவி, தன் குழந்தை என்று எங்களை மறந்து போனார். இன்று பணி ஓய்வுக்கு பிறகு இதே ஊரில் ஒரு வீட்டை வாங்கி அடுத்த தெருவில் வசிக்கின்றார்...!

காரியத்திக்கு போகலாமா வேண்டாமா....? மனம் அலை பாய்ந்தது...! உயிரோடு இருக்கும் வரை அந்த உறவு எங்களுக்காக என்ன செய்தது இன்று பிணமாக...! ஆனால் ஏழு எட்டு வயிசிலேயே எங்கப்பா என் மனசில இருந்து இறந்து விட்டார், இது யாரோ...? போகக் கூடாது என்று வைராக்கியத்துடன் உள் அரையில் போய் படுத்துக் கொண்டேன். ஆனால் காரணம் புரியாத துக்கம் மனதை அழுத்தியது. அழுகை வந்துவிடும் போல் இருந்து.....

தூரத்தில் பறையொலி கேட்டது..!
Tuesday, April 16, 2013
Posted by வீடு சுரேஸ்குமார்

மல்லி என்கின்ற ராதா!



இரவு நேரப் பனி குளிர்ச்சியாக கொட்டிக் கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் புளியமரங்கள் வானில் கைகோர்த்துக் கொள்ள குகை மாதிரியிருந்தது அந்தச் சாலை. மையிருட்டாக இருந்த போதிலும் நிலா வெளிச்சம் புளியமர இலைகளைத் தாண்டிக் கொண்டு மரத்தோடு ஒட்டிக் கொண்டு தலையை மட்டும் எட்டிப் பார்த்து எதாவதொரு வாகனம் தென்படுகின்றதா என பார்த்துக் கொண்டிருந்த மல்லியை ஒரு கறுப்புதாளில் வரைந்த புகை ஓவியம் போல காட்டிக்கொண்டிருந்தது இரவு.

அவள் மூக்கில் இருந்த மூக்குத்தியை திருகிக் கொண்டிருந்தாள், மெலிதான உருவம் மாநிறமாக இருந்தாள், பழைய நூல் சேலை, கூந்தலில் நான்கு முழம் மல்லிகையை வைத்திருந்தாள், ஏதோ மட்டமான பவுடரை தீட்டியிருந்தாள், ரவிக்கையை தாண்டி வெள்ளைநிற உள்ளாடை வெளியே தெரிந்தது, தொப்புளைத் தாண்டி சரிவாக புடவையை தளர்வாக கட்டியிருந்தாள் அந்த நிலவொளியில் ஒரு மாதிரி கிறங்கடிக்கும் விதமான விதத்தில் மல்லி அவ்வழியே ஆந்திரா போகும் லாரிக்காக காத்திருக்கின்றாள். நீண்ட பயணமாக செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு இந்தச்சாலை ஒரு தன் உடல் இச்சை தீர்க்கும் இடமாகும். புளியமரங்களைத் தாண்டி இருக்கும் வயல்களில் முளைத்திருக்கும் ஆளுயற புல்களுக்கு நடுவே சுத்தப்படுத்தி வைத்திருப்பார்கள். உடற்சூட்டைத் தணிக்க வருபவர்களுக்கு விவசாயம் பொய்த்துப் போன இந்த ஊரில் சில பெண்கள் தங்கள் வயிற்றுச் பாட்டைத் தணிக்க உடல் விற்பனையை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருத்திதான் மல்லி!

இதோ இந்த வயலுக்கு நடுவே ஒரு ஒற்றையடிப்பாதை தெரிகின்றதே இதில் சில அடிகள் நடந்தால் பத்து பதினைந்து குடிசைகள் தெரியும், அதுதான் மல்லியின் வாழ்விடம், பத்தாவது வரை நன்றாக படித்தவள்தான் மல்லி, குடும்ப வறுமையை கணக்கில் கொண்டு அவசரஅவரமாக பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த பதினொன்றாவது போகும் கனவில் இருந்தவளை மாரிக்கு கட்டிவைத்தார்கள். “பொம்பளைப் புள்ள படிச்சு என்ன ஆவப் போகுது” என்று வியாக்கியானம் பேசிய மல்லியின் அப்பன் மல்லியின் கழுத்தில் தாலி ஏறுவது கூடத்தெரியாமல் சாராய போதையில் கிடந்தான். இனம்இனத்தோடு சேரும் என்பதைப் போல மாரி மகாக்குடிகாரன், வேலை முடிந்து வரும்போது இதே புறவழிச்சாலையில் இருட்டில் தள்ளடியபடி சைக்கிளில் வந்தவனை அரைத்தூக்கத்தில் வந்த வாழைக்காய் ஏற்றி வந்த லாரி அரைத்துக் கூழாக்கி விட்டுப் போய்விட்டது. அவன் இறந்த போது கையில் ஆறுமாதக் குழந்தை...குடிகார தகப்பன், தாயுமில்லை, கட்டிட வேலைக்குப் போனாள் வேலியுள்ள பயிரே மேயப்படும் இந்த உலகில் இது வேலியில்லாத காடு சும்மா விடுவார்களா...? மேஸ்திரி யாருமற்ற ஒரு வேளையில் இடுப்பைக் கிள்ளினான், மார்பை உரசினான் இவள் செருப்பைக் காட்ட வேலையும் போனது. 

பல வேலைகள், பல தீண்டல்கள், கூட வேலை செய்த பாபு அன்பாக பேசினான் குழந்தைக்கு பால், பிஸ்கட் வாங்கிக் கொடுத்தான் இவள் நம்பினாள், ஒரு நாள் இரவில் வந்து குடிசைக்குள் புகுந்து இச்சைக்கு அழைக்க இவள் மறுக்க முரட்டுத்தனமான அவனிடம் தோற்றுப் போனாள், அவன் வீசிவிட்டுப் போன சில நூறு ரூபாய்கள்...நல்லவர்கள் என்று நம்பியவர்கள் எல்லாம் அவள் உடலை பயன்படுத்த இதையே தொழிலாக செய்தால் என்ன என்று கேள்வி கேட்டு இந்தப் பகுதியில் தொழில் செய்து வரும் தேவி இந்த பகுதிக்கு மல்லியை அழைத்து வந்து ஆயிற்று ஆறு ஏழு வருடங்கள்.

ஏதோ யோசனையில் இருந்தவள் லாரி வெளிச்சம் தூரத்தில் தெரிந்ததும் உற்சாகமானாள் மரத்தின் மறைவில் இருந்து வெளிப்பட்டாள் ஒரு கையினாள் சேலையை முட்டிவரைக்கும் தூக்கி கட்டிக் கொண்டாள், லாரி வெளிச்சத்தில் அவளின் தொடை பளபளத்தது லாரி நெருங்க....நெருங்க....மார்பகச் சேலையை ஒரு புறம் ஒதுக்கி ஒரு அரைநிர்வாண சிலையாக நி்ன்றாள், அவளைக் கடந்து லாரி ஒரு ஓரமாக ஒதுங்கியது அதிலிருந்து லுங்கியை தூக்கிக் கட்டியபடி வாயில் பீடியுடன் இறங்கினான் அதன் ஓட்டுநர்! நடந்து வந்து அவளை நெருங்கினான்.

“எவ்வளவு ரேட்டு” என்றான் 

“என்ன ஆயிரமா கேட்கப் போறேன்...!”

“இடம் இருக்கா...?” என்றான் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு.

“வாங்க உள்ள போலாம் இடம் இருக்கு..!” என்றபடி புல் புதருக்குள் நடந்தாள் அவனும் பின்னால் சென்றான் 

“உம் பேரு என்ன..?” என்றான் அவன் “ராதா” என்றாள் யாரிடமும் உண்மைப் பெயர் அவள் சொல்லுவதில்லை. வயலுக்கு நடுவில் புற்களை வெட்டி சுத்தப்படுத்தியிருந்த இடத்துக் சென்று அங்கே சென்று கீழே கிடந்த பழைய துணியைப் கீழே விரித்துப் போட்டு அதில் படுத்துக் கொண்டாள் மல்லி. அவன் நிலா வெளிச்சத்தில் அவளை ஒரு முறை ரசித்து விட்டு அவள் மேல் படர்ந்தான். 

                                                                             ****

இரண்டு நூறு ரூபாய் தாளை அவளிடம் கொடுத்துவிட்டு கிளம்பினான். ''ஒரு நிமிசம் இருங்க நானும் வர்றேன்'' என்றாள் மல்லி ''எதுக்கு..?'' என்றான் ''இல்லங்க குழந்தைக்கு இரண்டு நாளா காய்ச்சல் மருந்து வாங்கணும்..! என்னைப் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுடுங்க...! நான் வரும்போது எதாவது வண்டி படிச்சு வந்துக்கறன்'' என்றபடி அவனின் பதிலை எதிர்பார்க்காமல் அவன் கூடவே நடந்தாள்.லாரியில் இருவரும் ஏறி அமர்ந்து கொள்ள லாரியை கிளப்பினான்...!

“உங்களை எனக்குத் தெரியும் நீங்க.....ரவிதானே...?”என்றாள்!

“ஆமா எம் பேர் ரெவிதான் உனக்கு எப்படி...தெரியும்..?”

நான்தான் மல்லி உன்கூட பத்தாவது படிச்சனே..! ஞாபகம் இருக்கிறதா..? நீ கூட என் நோட்டில ஜ லவ் யூன்னு எழுதி நான் முருகசாமி வாத்தியார்கிட்டச் சொல்லி அவரு உன்னை அடி பின்னி எடுத்தாரே..?

“நீ..... எப்படி மல்லி இப்படி....? என்னை எப்படி அடையாளம் கண்டுபிடிச்சே...?”

“நீ படிக்கும் போது மாடு முட்டி ஆஸ்பத்திரியில் இருந்தப்ப நாங்க ஸ்கூல் பசங்க புள்ளைக எல்லாம் பாக்க வந்தமே....!அப்ப உன்ற இடுப்புல ஒரு தையல்  போட்டிருந்தாங்க....அந்த தழும்புதான் எனக்கு உன்னைக் காட்டிக் கொடுத்ச்சு! நீ புழங்கி எந்திரிச்சு சட்டையப் போடும் போதுதான் பார்த்தேன்...அப்புறம்தான் உம்மூஞ்சிய நல்லா பாத்து நீதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்....நீ நல்லா இருக்கியா...? கல்யாணம் பண்ணிட்டியா..?”

ம்ம்ம்.....!இரண்டு குழந்தைக...! உன்னை இந்த நிலையில் பார்க்க மனசு கஸ்டமா இருக்கு மல்லி...! அதுவும் இல்லாம உன்னை நானும் என்றான்..!

“அடப் போடா...! நீ சின்ன வயசுல என்னை விரும்பினே..! இன்னிக்கு உனக்கு கிடைச்சிருக்கேன். சந்தோசப்பட்டுக்கோ..!எல்லா ஆம்பளையும் யோக்கியனாகிட்டா நாங்க எப்படிப் பிழைக்கறது.....!மனசப் போட்டு குழப்பிக்காத இந்தப்பக்கம் வந்தா வா..!” பேருந்து நிலையம் வரவே லாரியை நிறுத்தினான் 

மேலும் ஒரு இரண்டு நூறு ரூபாயை எடுத்துக்அவள் கையில் திணித்தான் ரவி. “வேண்டாம் நீ கொடுத்ததே அதிகம்தான்...!வச்சுக்கோ..!” என்று திரும்ப அவன் கையிலேயே கொடுத்து விட்டு இறங்கி கையசைத்தாள் அவன் மல்லியை இறக்கிவிட்டு மறைந்தான்...! மருந்துக் கடையைப் பார்த்து நடந்தாள்....அன்னிக்கு மட்டும் வாத்தியார்கிட்ட சொல்லாம இருந்திருந்தா லாரிக்காரன் பொண்டாட்டியாயிருப்பேன்...! என்று சற்று உரக்கவே சொல்லிவிட்டாள்..! பிறகு உணர்ந்து தலையில் தட்டிக் கொண்டு சிரித்தாள்..! வாய்விட்டுச் சிரித்தாள்...!
Tuesday, April 9, 2013
Posted by வீடு சுரேஸ்குமார்

பழனி முருகனுக்கு....அரோகரா..! பக்தர்களுக்கு வேதனைதானா...?


பழனி என்றாலே எனக்கு முதலில் பிடிக்காமல் இருந்தது. ஏனென்றால் உலகத்தில் ஆன்மிக சுற்றுலாத்தலத்தில் மிக அதிகமான பிராடுகளை கொண்ட தலம் இத்தலம்தான். கையில் சந்தனத்தை வைத்துக் கொண்டு ஒளிந்து கொள்வார்கள் திடீரென்று ஓடி வந்து  பொட்டு வைத்து காசு பிடுங்கும் பெண்கள் கூட்டம், பிற மாநிலத்தவர்கள் வந்தால் கீழே அடிவாரத்திலேயே டோக்கன் வாங்க வேண்டும் என்று ஸ்பெசல் தரிசனம் என்று ஆயிரம் ஜநூறு என்று இரக்கமேயில்லாமல் பிடிங்கிவிடுவார்கள். மேலே சென்றால் அந்த டோக்கனை வைத்துக் கொண்டு பத்து ரூபாய் வரிசையில் கூட போகமுடியாது  நிறைய சேட்டன்கள் குடும்பத்துடன் பரிதாபமாக நிற்பதை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். 

அர்ச்சகர்கள் அதற்கு மேல் தனிவழியில் நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு விடுவார்கள். செருப்பு, நம் உடமைகளை இங்கே வைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறும் கடைக்காரர்கள் உடமைகளை திருடிக் கொள்வதும். ஏமாந்தால் மொட்டையடிக்கும் கூட்டம் இந்த தலத்தில்தான் ஏராளம். ஆனால் இப்பொழுது காவலர்களை வைத்து பொட்டு வைக்கும் பெண்களை அறவே இல்லாமல் செய்து விட்டார்கள். மற்ற ஏமாற்றச் செயல்கள் ஓரளவு குறைந்திருக்கின்றது.

பழனி சென்று மகனுக்கு இரண்டாவது மொட்டையடிக்க வேண்டும் என்பது மனைவியின் வேண்டுதல், வெயில் காலத்தில் குழந்தைகளின் அதிகப்படியான முடி இருப்பது அவர்களுக்கு எரிச்சலையும், வியர்த்து எந்த நேரமும் வியர்வை ஈரத்துடன் இருந்தால் சளி பிடித்துக் கொண்டு நம்முடைய பாக்கெட்டில் இருந்து சில ஜநூறு ரூபாய்களை மருந்து மாத்திரைகளுக்கு அழவேண்டியிருக்கும் என்பதால் இந்த வாரம்... அடுத்த வாரம் என காலம் தாழ்த்தி போன ஞாயிறு குடும்பத்துடன் காலை 5.00மணிக்கு எழுந்து அதிகாலை தூக்கத்தை தொலைத்து காலை 7.00மணிக்கு திருப்பூரில் அதிக கூட்டத்தை சுமந்து கொண்டு விழிபிதுங்கியபடி மெதுவாக அரசு பேருந்தில் பழனி போனோம்.

பழனி சென்று அடிவாரத்தில் மொட்டையடித்து படியில் மெதுவாக ஏறினால் முருகனை தரிசிக்க பங்குனி கொடுமுடி தீர்த்தம், காவடி எடுக்கும் பக்தர்கள், சேரநாட்டவர்கள் (சேச்சிகள் அதிகப்படியாகவே தமிழ்அழகனை தரிசிக்க நின்றிருந்தார்கள்). பத்து ரூபாய் கட்டணம், இலவச தரிசனம், நூறுரூபாய் கட்டணம் என ஒரு லட்சத்தைத் தாண்டும் கூட்டம். காலை பதினொன்று மணிக்கு வரிசையில் நின்று மாலை நான்கு மணிக்கு இராஜஅலங்காரத்தில் முருகனை தரிசித்தோம், ரோப் கார் என்று அழைக்கப்படும் ஒரு கழுதை வண்டியில் ஏற மூணு மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம்!  மறுபடியும் படியில் இறங்கலாம் என்று முடிவு செய்து யானைத்தடத்தில் இறங்கினோம். நாங்க படியில் இறங்கி பல மணி நேரம் கழித்து ரோப் காரில் வந்தவர்கள் வந்தார்கள் இந்த ரோப் கார் கழுதையை எதாவது பேரிச்சம் பழத்துக்கு போடுவது நல்லது. அப்புறம் பழனியில் கிடைக்கும் குளிர்ப்பானம், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் அத்தனையும் ஒரிஜினல் மாதிரியே இருக்கும் ஆனா இருக்காது அத்தனையும் டூப்ளிகெட்டுகள். பேருந்து நிலையத்தில் இருக்கும் கடையில் பகிரங்கமாக விற்பனை செய்கின்றார்கள்.

மேலே ஏறிக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் மயக்கம் போட்டு கீழே விழ ஒரே கூச்சல், குழப்பம், அந்த பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்த சில இளைஞர்கள் தோளில் தூக்கிப் போட்டு வேகமாக இறங்கினார்கள். எந்த மருத்துவ வசதியும் படியில் ஏறுபவர்களுக்கு கிடையாது. ஒரு ஸ்டெச்சர் கூட இல்லை. அதை விட கொடுமை பாதுகாப்புக்கு என குறைவான காவல் துறையினரே உள்ளனர். ஒரு பெண் காவலர் ஒருவரே வரிசையில் நிற்பவர்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார் அடிக்கின்ற பங்குனி மாத உக்கிரமான வெயிலுக்கு மிகவும் களைத்துப் போனார் அவரும் பாவம். கோயிலில் வரும் வருமாணத்தைப் பெறுவதில் காட்டும் அக்கரையை பக்தர்கள் மேல் துளியும் காட்டாத தமிழக அரசு கொஞ்சம் திருப்பதி நிர்வாகத்தைப் பார்த்தாவது திருந்தினால் நல்லது. சுகாதாரம் மருந்தளவு கிடையாது வரிசையில் நிற்கும் கூண்டு மாதிரியான இடங்களில் அதிக்கப்படியான குரங்குகள், அதன் எச்சங்கள், மக்கள் நெருக்கடியை தாங்காத சில பெண்கள் எடுத்த வாந்திகள், என கடும் துர்நாற்றம் கோவிலா கவர்மெண்ட் கக்கூஸா என ஜயம் ஏற்படுகின்றது. இலவச செருப்பு விடும் இடத்தில் வற்புறுத்தி காசு கேட்பது என்று பழனிக்கே உரித்தான பக்தர்களை மொட்டையடிக்கும் கும்பல் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். முருகன் பாவம் என்ன செய்வாரு அவரு முதுகையே சுரண்டி பாதி திருடி வித்துட்டானுக..! முருகா கோமணத்துக்கு உருவாஞ்சுருக்கு மட்டும் போட்டுறாதே...!படிமுடிச்சு போட்டுக்கோ சொல்லிட்டேன் ஆமா..!

பரதேசி



ம்நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் சென்னை மாகாணத்தின் தென் பகுதியில் உள்ள சாலூர் என்கின்ற கிராமத்தில் இருந்து ஆனைமலை எஸ்டேட்டுக்கு கங்காணியின் ஆசை வார்த்தையை நம்பிச் சென்ற மக்களை...பற்றியும் ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக வதைக்கப்பட்ட ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வரலாறைப் பரதேசி என்கின்ற படத்தின் மூலம் இயக்குனர் பாலா ஆவணமாக பதிந்திருக்கின்றார்.

38 வருடங்களுக்கு முன் பி.எச்.டேனியல் “Red Tea” என்று ஆங்கிலத்தில் எழுதிய நூலை 38 வருடங்களுக்குப் பிறகு தமிழில் இரா.முருகவேள் என்பவரால் “எரியும் பனிக்காடு” என்கின்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு செதுக்கப்பட்ட திரைப்படம்தான் பரதேசி. அந்த புத்தகம் பற்றிய விமர்சனத்தை கிரி என்பவர் எழுதியுள்ளார்.


ஒட்டுபொறுக்கி என்று செல்லமாக அழைக்கபடும் அதர்வா ஒரு தண்டோரா போடுபவன், அவனுக்கும் அங்கம்மா என்கின்ற துடிப்பான பெண்ணுக்குமிடையே காதல் உருவாகி காமத்தில் முடிகின்றது, இதற்கிடையில் ஒரு கங்காணியை சந்தித்த ஒட்டுப் பொறுக்கி கங்காணியின் ஆசை வார்த்தைகளை நம்பி  ஒரு நெடும் பயணமாக நாற்பத்தெட்டு நாட்கள் ஆனைமலை நோக்கி நகர்கின்றது அவனுடைய கிராமம் அந்த பயணத்தின் போது மயக்கமடைந்த ஒருவனை கைவிட்டுவிட்டு அடிமாட்டு மாடுகளைப் போல் மனிதக்கூட்டம் நகர்கின்றது.

அது சொர்க்கம் என்று அழைத்து செல்லும் கங்காணி அங்கே நரகத்தை விட கொடுமையான சூழலை அந்த மக்களுக்கு தருகின்றான். மருத்துவர் என்கின்ற பெயரில் ஒரு அரைகுறையை வைத்து தப்பித்து ஓடுபவர்களின் கால் நரம்பை துண்டிப்பது, காலரா வியாதியின் போது மொத்தமாக எரிக்கப்படும் சடலம், அவர்களுடைய கூலியை ஒரு இந்து சாமியார், மளிகைப் பொருள் தரும் சாயுபு, கம்பவுண்டர் குரூஸ் என்று பொய் கணக்கு கூறி பிடிங்கிக் கொள்கின்றார்கள். கடும் குளிரில் அட்டைக்கடி மற்றும் உடலைக் கிழிக்கும் தேயிலைச் செடியின் கொடுமைகளில் இருந்து வியர்வை, இரத்தம் சிந்தி உழைத்த காசை அவர்களே கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கின்றார்கள்.

இதற்கு இடையில் அங்கம்மா கர்பிணியாகின்றாள் தாலி கட்டாமலே ஒரு குழந்தையும் பெற்றெடுக்கின்றாள். நாம் ஒவ்வொரு காட்சியிலும் பதைபதைக்க வைப்பதிலும்...குழந்தையைக் காண ஒட்டுப்பொறுக்கி தப்பித்து போகமாட்டானா...? என நம்மை ஏங்க வைப்பதில் எதார்த்தமான ஒரு கதை நகர்தல், இயக்கம் ஒரு காரணம் என்பதில் மிகையில்லை.

மருத்துவம் பார்க்க வருபவர்கள் கிருத்துவத்தை பரப்புவது. இந்த ஆன்மீக கங்காணி நம்ம கங்காணியை விட பயங்கரமானவர்கள் என்று வெள்ளைக்காரர்களே சொல்வது பாலா டச். நாஞ்சில் நாடனின் வசனத்தில் கிராமமக்களின் சிலேடை பேச்சு எந்த கூச்சமும் இன்றி படத்தில் வைத்திருக்கின்றார்கள் அதில் சிலது “ராசா வந்திருக்கேன்” என்கின்ற அதர்வாவிடம் “மந்திரி எங்கடா...?” என்கின்ற பெரிசின் வேட்டியை சரிசெய்து விட்டு “உம்ம மந்திரியை மறைச்சு வை பெரியப்பா“ என்கின்ற இடத்திலும், “வேலை கடுமையா இருக்குமாஞ் சாமி?” என்று கங்காணியிடம் கேட்பவனிடம் “மூலம் வந்தவனுக்கு பேழறது கூட கஸ்டத்தான்“ என்கின்றான் கங்காணி, “சாமீ வெள்ளைக்காரிக நிறைய இருப்பாளுகளாஞ் சாமீ“ “அதெல்லாம் நிறைய இருப்பாளுக குளுருக்கு உன்னைக் கூப்பிடுவாளுக போயிட்டு வா” என்கின்றான் கங்காணி அதற்கு இன்னொருவன் “வெள்ளைக்காரி சூட்டுக்கு நீ வெந்தல்ல போவியே..!” என்கின்ற இடங்களில் எல்லாம் நாஞ்சில் நாடனின் ஆளுமை இருக்கின்றது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் வைரமுத்துவின் வரியில் அவத்த பையா...?  என்கின்ற பாடலில் காதலும்,   ஓ.....செங்காடே....சிறு கரடே போய் வரவா...?என்கின்ற பாடலில் வாழுமிடத்தைப் பிரியும் சோகமும், யாத்தே....காலக் கூத்தே......பாடலில் நம் சமுதாயம் வாழ்ந்த அடிமை வாழ்க்கையும் கண் முன்னே கொண்டு வந்தாலும் இளையராஜாவின் சாயல் ஆங்காங்கே இழையோடுவதை தவிர்த்திருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் கேமரா குடிசை வீட்டின் இடைவெளியில் செல்வதிலும், முன்னால் மாட்டு வண்டியில் கங்காணி செல்ல பின்னால் மந்தைகள் போல ஆட்கள் செல்லும் காட்சியில், பார்வையாளர்கள் எழுப்பும் கரவொலி செழியன் அவர்களுக்குறியது. தேயிலைத் தோட்டத்தின் செடிகளுக்கிடையில் செல்வதும் பிரமிப்பைத் தருகின்றது கதை அமைப்புக்கு உறுத்தாமல் நன்றாக வந்திருக்கின்றது. அறிமுக கலை இயக்குனர் பாலசந்தரின் கலை நுணுக்கத்தில் இயல்பான குடிசைகளும் அதர்வா, வேதிகா சந்திக்கும் சிதிலமடைந்த குடிசை வீடும் வெகு இயல்பு.

புருசன் எஸ்டேட்டை விட்டு ஓடிப் போக புருசனின் கடனை அடைக்க கொத்தடிமையாக இருக்கும் தன்சிகா, கிராமத்து புதுபெண்ணாக திருமணம் முடிந்தவுடன் வேலைக்கு வந்த அந்த பெண் வெள்ளைக்காரனின் காமப்பசிக்கு இரையாகின்றாள் எதையுமே எதிர்க்க முடியாமல் அழும் புருசனாக வருபவர், கூன் விழுந்த கிழவி, கிராமத்து பெரியப்பாவாக வரும் கவிஞர், அங்கமாவாக வருகின்ற வேதிகா என பலரும் மிகவும் கடினமான கடும் பனிக்காட்டில் அந்த மனிதர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள்.படத்தைப் பற்றி கூற ஒற்றை வரி போதும்  “திரைப்பட இடைவேளையில் தேனீர் குடிக்க விருப்பமில்லை”
Friday, March 15, 2013
Posted by வீடு சுரேஸ்குமார்

விஸ்வரூபம்


விஸ்வரூபம் பல சர்ச்சைகளுக்கிடையே சில ஆடியோவை  'MUTE'  செய்து, கொஞ்சம் 'சீனை'க் 'CUTE' செய்து, ஒரு வழியாக அதிகச் சேதாரமில்லாமல் தமிழகத்தில் வெளியாகி தன்னுடைய ரூபத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

திருப்பூர், கோவையில் தினம் ஐந்து காட்சிகளாக அரங்கம் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கின்றது,கமல் விளம்பரதாரர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம் தவறில்லை! கமல் மகிழ்ச்சியை ஒரு ஆம்பூர் பீப் பிரியாணி சாப்பிட்டு கொண்டாடிக் கொள்ளலாம்.

பாலக்காடு டப்பா தியேட்டரில் ரசிகர்களின் கூச்சலுக்கிடையில் பார்த்ததால் நிறைய வசனங்கள் சுத்தமாக புரியவில்லை. இன்று திருப்பூரில் பார்த்தபோதுதான் புரிந்தது இந்த படத்தில் சர்வதேச மொழிகள் அரபி, உருது, ஆங்கிலம் என்று படம் முழுவதும் வியாப்பித்துள்ளது.

பூஜாகுமாரின் 13 வருட வன வாசத்திற்கு பிறகு விஸ்வரூபத்தில் திறந்த மார்பும், அய்யங்கார் பாஷை பேசும் மூடாத வாயும் சில இடங்களில் எரிச்சலையும், எச்சிலையும் உருவாக்குகின்றது.

ஆன்டிரியா பாடகர் அனிருத் உதட்டை கவ்வி இழுத்த காட்சியை யுடுயூப்பில் பார்த்து புளங்கிதம் அடைந்த வாலிப, வயோதிக அன்பர்களே கமல் படத்தில் என்றவுடன் குதூகலமடைந்திருப்பிங்க....அப்படியே மனசை ஒரு போர்வை போட்டு மூடி வைத்துவிடுங்கள் இருவருக்கும் கைகுலுக்கும் காட்சி கூட இல்லை.

சரி படத்தைப் பற்றிப் பார்ப்போம். ஆப்கன் செட்கள் வயசுக்கு வந்த அத்தை பொண்ணுக்கு கட்டிய குச்சு போல ஆங்காங்கே ஏராளமான ஓட்டைகள். குகை செட்டில் சாக்கு துணி அப்பட்டமாக தெரிக்கின்றது. அதை தவிர்த்துப் பார்த்தால் படம் ஒரு பக்கா ஆங்கிலப்படம். ஒரு சில சினிமாட்டிக் காட்சிகள் மட்டுமே நீ பார்த்துக் கொண்டிருப்பது தமிழ் சினிமா என்று நியாபகப் படுத்துகின்றது அதை பின்னால் பார்ப்போம்.

எத்தனையோ நடிகர்கள் ஸ்திரீபாட் என்கின்ற பெண் வேடத்தில் நடித்தாலும் கமலின் நளினம் கடுகளவும் வராது. கமலின் Perfect Performance யாருக்கும் வராது நான் இந்திய அளவில் சொல்லுகின்றேன், (நீங்க ஜிம்கேரிய சொல்லுவீங்கன்னு தெரியும்) கதக் கலைஞராக நளினத்துடன் அவர் நடனம் ஆடும் போதும், சாதாரணமாக நடக்கும் போதும், அவர் பேசும் அய்யங்கார் பாஷையும் சான்சே கிடையாது. தான் பிறவிக் கலைஞன் என்பதை அடிக்கடி நிருபிக்கின்றார்.

கமல் உமரின் ஆப்கன் தீவிரவாதப்படையில் சேர்ந்ததும் ரன்வேயில் ஓடி முடித்த விமானம் ஜிவ்வென்று மேலேழும்புவதைப் போல வேகமெடுக்கின்றது. நோட்டோ படையின் தாக்குதல், பின்லேடன் வருகை, துரோகத்திற்காக தூக்கிலிடுதல். தூக்கிட்டு முடித்ததும் கால்களை தடவிப்பார்த்து திரவம் வெளியாகியு்ள்ளதா என சோதித்தல். என நுட்பமான சில காட்சிகள். நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. (தூக்கிலிடப் பட்டவர்கள் எந்த விதமான கழுத்து எழும்பு முறிவில்லாமல் மூச்சுக்குழாய் நசுங்கி இறக்கும் போதுதான் சிறிது மலம், சிறுநீர், விந்து, வெளியாகும் அப்படி திரவம் வெளியானால் மட்டுமே முறையான மரணம் என்று அர்த்தம்)

I am not child என்று ஒரு சிறுவன் ஓடுகின்றான் ஊஞ்சலில் ஆடாமல், அவனை விட மூத்தவனான அண்ணன் ஊஞ்சலில் ஆடுகின்றான். அடுத்த நாள் மனிதவெடி குண்டாக நோட்டோ படையின் வாகனத்தை சிதறடித்து மரித்துப் போகின்றான். அடிப்படைவாதிகள் குழந்தையாகவே இருக்கின்றார்கள் என்பதை உணர்த்துகின்றது இந்த காட்சி.

அமெரிக்க FBI இந்திய உளவாளியின் உதவியினால் நகரத்தில் நிகழக்கூடிய ஒரு குண்டு வெடிப்பை தடுக்கின்றது என்பது லாஜிக் இல்லாதது என்றாலும் சில இந்திய வழக்குகள், தமிழக காவல் துறையின் வழக்குகள் குறிப்பிட்ட நாடுகளில் காவல்துறையின் துப்பறியும் பிரிவுக்கு பாடமாக உள்ளது எனும் போது சாத்தியமே என்றும் கூடக் கூறலாம்.

நிறைய நியூக்கிளியர் பாம் பற்றி பல அறிவியல் வார்த்தைகள் சராசரி ரசிகனான எனக்கு புரியாத போதும். இன்னமும் சிகப்பு டேப் சுற்றப்பட்ட டைப்பீசை பாம் என்று காட்டினால் கெக்கபிக்கே என்று சின்ன குழந்தை கூட சிரித்து விடக் கூடிய அபாயமும் இருக்கின்றது.

ஆரம்ப காட்சியில் கை கட்டி வைத்துள்ள கமல் இறந்தவனுக்காக தொழுகின்றேன் என்று கேட்டு தொழுதபின் எடுக்கும் விஸ்வரூபம்

கடைசியில் அமெரிக்க ராணுவ வீரன் கேட்கும் கேள்விக்கு நமக்காக தொழுகின்றார் என FBI அதிகாரியே கூறுவது போன்ற சில இடங்கள் சினிமாட்டிக்காக இருப்பது என்று ஒரு சில குறைகளும் உள்ளது என்றாலும் விஸ்வரூபம் நிறைய விசயங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

இந்த திரைப்படம் இஸ்லாமியர்களை சிறுமைப் படுத்துகின்றதா? என்றால் நான் இஸ்லாமியனாக இருந்தால் மட்டுமே அதை உணர முடியும்…! நான் இஸ்லாமியன் இல்லை அதை எப்படி உணர்வது? ஆனால்! பால்தாக்ரே மற்றும் இராமகோபாலன் பற்றியோ…! இந்து மதவாதிகளைப் பற்றியோ…? நித்தியாணந்தா சங்கராச்சரி பற்றியோ…? படம் வந்தால் அது என்னை எந்த விதத்திலும் சினப்படுத்தாது, காயப்படுத்தாது என்பதை மட்டும் ஒரு இந்துவாக நான் இங்கு பதிவு செய்கின்றேன்.

இந்த படத்தின் அடுத்த பாகம் இருக்கின்றது என்று கமல் இன்னோரு "பொக்ரானை"ப் போடுகின்றார் பார்க்கலாம். அது எப்படி வெடிக்கின்றது என்று…!

Thursday, February 7, 2013
Posted by வீடு சுரேஸ்குமார்

டாலர் நகரம் புத்தகமும்...சில கேள்விகளும்..!


ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தகம் இருநூறு பக்கங்களுக்கு மேல்  உள்ளது. தரமான அடர்த்தியான காகிதத்தில்; முழுப் பக்கங்களும் வண்ண புகைப்படங்களுடன் கூடிய அழகான வடிவமைப்புடன், சற்றே பெரிய எழுத்தில் அனைவரும் படிக்க சிரமில்லாமல் நேர்த்தியாக, அழகாக, தரமாக, வந்துள்ளது. தரத்துடன் ஒப்பிடுகையில் விலையும் மிகக்குறைவுதான் சரி விமர்சனத்திற்கு செல்லலாம்.

ஜோதிஜியின் முதல் புத்தக பிரசவம் என்கின்ற எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி அதில் உள்ள விசயங்கள் திருப்பூரின் முழுபிம்பத்தையும் காட்டுகின்றதா…? இந்த புத்தகம் திருப்பூரைக் காட்டுகின்ற கண்ணாடியா...?என்கின்ற கேள்வி உங்களுக்கு எழலாம்..! படித்து முடித்த பிறகு இதே கேள்வி எனக்கும் எழுந்தது!

சுவாரஸ்யமாக போகும் ஒரு நாவல் போல.... தான் காரைக்குடியில் இருந்து ஒரு மஞ்சள் பை, வெள்ளை வேட்டியுடன் இந்த மண்ணில் கால் வைத்ததிலிருந்து, இன்று வரை நடந்த விசயங்களை ஒரு கதை போலவே சொல்கின்றார் ஜோதிஜி.

அதில் ஆங்காங்கே பனியன் நிறுவனங்களைப் பற்றி, நிட்டிங் பற்றி, சாயத் தொழில் பற்றி, பையிங் ஆபிஸ் என்றழைக்கப்படும் புரோக்கர்களின் தில்லு முல்லுகள் பற்றி விரிவாக விவாதிக்கின்றார்,. நான் பையிங் ஆபிஸ் பற்றி எழுதியதை படிக்க... படிக்க.... அத்திப்பழம் நியாபகம் வருகின்றது. வெளியில் பளபளப்பாக இருக்கும் அத்திப்பழத்தை பிய்த்துப் பார்த்தால் ஏராளமான புழு நெளியும். என்னைப் போல் உற்பத்தி துறை சாராதவர்களுக்கு பையிங் ஆபிஸ் என்பது ஒரு மதிப்பு மிக்க இடமாகும் அதைப் பிய்த்து புழுக்களை ஜோதிஜி காட்டிவிட்டார்.

பாலியல் பிரச்சனைகள் பற்றியும் 18மணி நேர உழைப்பு என்று தொழிலாளர்கள் பிரச்சனைகளைப் பற்றி அலசியிருந்தது பாராட்டத்தக்கது. அதில் அவர் நண்பர் ஒருவரே பெண்ணாசையினால் அவதிப்பட்டதையும் நடுத்தெருவிற்கு வந்ததையும் பற்றி கூறியிருந்தார். அது நிறைய பேருக்கு பாடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இடைவிடாத வேலை ஓயாத உழைப்புக்கு மத்தியில் திருப்பூர் மக்கள் தங்கள் மனதை அமைதிப்படுத்த சென்னை போன்ற நகரங்களில் உள்ளது போல கடற்கரையோ சுற்றுலா தளங்களோ இங்கு இல்லை.ஒரே ஒரு பூங்கா இருக்கு அதுவும் பெயரளவில்தான் இருக்கின்றது.

மனதில் ஏற்படும் அழுத்தத்தை தீர்க்க மதுக்கடையும், விபச்சாரப் பெண்களை நாடுவதை தவிர இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேறு வடிகால் இல்லை.சிலர் தாங்கள் பணி புரியும் நிறுவனங்களில் உடன் வேலை செய்யும் நபர்களிடமே காம சுகத்தையும் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றார்கள். ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவர்களே தடம் மாறிச் செல்கின்றார்கள். அதனால் இங்கு எய்ட்ஸ் நோய் நாமக்கல்லுக்கு அடுத்த இடத்தில் உள்ளது என்பதையும் இந்த புத்தகம் தெளிவு படுத்துகின்றது.

இதில் குறிப்பாக சாயத் தொழிற்சாலை முதலாளிகளின் பேராசையினால் இயற்கைச் சீரழிவு பற்றி சிந்திக்காமல் நடுஇரவில் திருட்டுத்தனமாக சாயக்கழிவுகளை ஆற்றில் விட்டதை தெளிவான ஒரு பார்வையை எடுத்து வைத்திருக்கின்றார். சாயத்தொழிலில் ஈடுபடும் தொழிளார்கள் நலன் பற்றியும், அவர்களுக்கு ஏற்படுகின்ற நோய் பற்றியும் சாப்ட் புளோ என்கின்ற நவீன இயந்திரம் வருகையினால் ஏற்பட்ட தொழிற்புரட்சியும், சாயமேற்றும் சில வகை அமிலங்கள் பற்றியும் தெளிவான குறிப்பிட்டுள்ளார். பயனற்றுப் போன சென்னிமலை அருகில் உள்ள ஒரத்தப்பாளையம் அணையும் விவசாயிகளும் சாய முதலாளிகளும் இரு துருவங்களாக மோதிக்கொள்ளும் சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சில இடங்களில் ஊறுகாய் போல உள்நாட்டுத் தயாரிப்பை பற்றி கூறியுள்ளார். ஆங்கிலம் நன்கு தெரிந்தால் போதும் மூளையை வைத்தே பல கோடிகளை அள்ளியவர்களைப் பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டு பனியன் நிறுவனங்களில் ஆட்களை அழைத்து வந்து வேலை வாங்கும் ஒப்பந்ததாரர்கள் பற்றி சில இடங்களில் கூறியுள்ளார்.

அதிகமாக ஜோதிஜி பனியன் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றியும், சாயத் தொழிற்சாலை பற்றியும் மட்டுமே தன் களத்தில் கொண்டு வந்திருக்கின்றார், அது அவர் உலகம் அது ஒரு குறுகிய வட்டம் ஆனால் அதைத்தாண்டி ஒரு பிரம்மாண்டமான உலகம் திருப்பூரில் உள்ளது அதுதான் பிரிண்டிங் தொழில். 

பனியன் துணிகளில் உள்ள அழகாக கார்டூன் பொம்மை படங்கள், பல டிசைன்களைப் பார்த்திருப்பீர்கள், உலக அளவில் பல நாடுகளில் பேசப்படுவது திருப்பூர் பின்னலாடை என்றால் அந்த பின்னலாடையில் பிரிண்டிங் செய்வது என்பது உலகம் முழுவதுமுள்ள ஜவுளி நிறுவனங்களால்  திருப்பூர் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. 

பெங்களூரு, புனே, மும்பை, லூதியானா, அகமதாபாத் போன்ற நகரங்களில் இந்த தொழில் இருந்தாலும் அங்குள்ள நவீன ரக இயந்திரங்களில் குறிப்பிட்ட வகை பிரிண்ட் மட்டுமே அடிக்க முடியும். ஆனால் திருப்பூரில் மட்டும்தான் எளிதாக கையில் அடிக்கக் கூடிய இயந்திரம் முதல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நவீன இயந்திரம் வரை பயன்படுத்தப்படுகின்றது. அது மட்டுமில்லாது திருப்பூரில் அடிக்க முடியாத பிரிண்ட்டை உலகத்தில் வேறெங்கும் அடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பிரிண்டுகளில் அழகான பாசிகள், முத்துகள், வைப்பது சில்வர் போன்று மினுமினுக்கும் பாயில், பஞ்சு போல் மெத்தென்று இருக்கும் புளோக் பிரிண்ட், டை அன் டை, டிச்சார்ஜ் பிரிண்ட், இரவில் ஒளிரும் ரேடியம் பிரிண்ட், தோல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பயோ பிரிண்ட், என்று இது பனியன் தயாரிப்பு நிறுவனங்களை விட அதிக லாபம் கொழிக்ககூடிய பிரம்மாண்டமான ஒரு தொழில் அதைப் பற்றி ஒரு வரிகள் கூட இல்லை என்பதே இந்த புத்தகத்தில் உள்ள ஒரு குறை! ஜோதிஜி அடுத்த பதிப்பில் இதைச் சேர்க்க வேண்டுகின்றேன்.

இது அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுத்த சுவையான, படிக்க சுவாரஸ்யமான ஒரு புத்தகம் மற்றும் திருப்பூர் வேலைக்கு வர முயலுகின்றவர்களின் வழிகாட்டியாக திகழும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் திருப்பூர் பின்னலாடைத் தொழிலை முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை என்பதே முதல் பத்தியில் நான் வினவியிருந்த கேள்விக்கான பதில்! 

டாலர் நகரம்

4தமிழ் மீடியா வெளியீடு

விலை : 190.00

டிஸ்கி : திருப்பூர் புத்தக கண்காட்சியில் டாலர் நகரம் புத்தகம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, பதிவரில்லாத பலர் வாங்கிச் செல்கின்றனர். திருப்பூரைச் சார்ந்த ஒருவர், அதுவும் எங்கள் நண்பர் எனக்கு தொழில் மற்றும் பதிவுலக வழிகாட்டி ஜோதிஜியின் புத்தகம் பற்றி வாய்வழியாக பாராட்டுகளைக் கேட்கும் போது என்னையே பாராட்டுவது போன்று அகமகிழ்கின்றேன்!

தேரடி வீதியில் சில தேவதைகள்....!



ச்சேரி மேட்டில் இருந்து சைக்கிளை துளியளவு கூட மிதிக்காமல் பறந்தது.....கதிரு மிதிக்க நான் பின்னால் இருந்து தாண்டுகால்ப் போட்டு மிதிக்க, தறி கெட்ட குதிரை வண்டி மாதிரி பறந்தது...! நாங்க எங்க ஊர்ல இருந்து பதினைந்து கிலோ மீட்டர் பயணித்து செல்லும் இடம் பாரியூர் கோவில் திருவிழாவிற்கு! சுற்றிலும் உள்ள வயல்களுக்கு நடுவில் பாவானி ஆற்றின் கிளை வாய்க்கால் கரையில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ளது இந்த அம்மன் கோவில், வருடம் ஒரு முறை நடக்கும் திருவிழாவிற்கு சுற்றுப் புறமிருந்து பல கிராமங்களில் இருந்து மக்கள் பொங்கல் வைக்கவும், பூ மிதிக்கவும், தீர்த்தம் எடுக்கவும், மக்கள் இக்கோவிலை வருடத்தின் ஒரு மாதத்தில் மையமாக கொண்டு கூடுவார்கள். 

நாங்கள் செல்வது இதில் ஒன்றைக் கூட செய்வதற்கில்லை! நாங்கள் செல்வது “சைட் அடிக்க” பல ஊர் தேவதைகள் கோவிலை வலம் வர , நாங்கள் தேவதைகளை வலம் வரவே சைக்கிளை மிதித்துக் கொண்டு செல்கின்றோம். 

இன்று விடிய விடிய இசைக்கச்சேரி, எல்.ஆர்,ஈஸ்வரியின் “செல்லாத்தா செல்ல மாரியாத்தா...” பாடலில் துவங்கும் கச்சேரி நடு இரவிற்கு பிறகு காலேஜ் பீடி, வில்லேஜ் பீடி கம்பனிகாரர்களின் தயவில் சினிமா பாடல்களுடன் களை கட்டும், விடியக்காலை மூன்று மணி வரைக்கும் நடக்கும் கச்சேரிக்கு மகுடிக்கு மயங்கிய பாம்புகளாக ஜனங்கள் அமர்ந்திருக்க நாங்களும் தேவதைகளை “சைட்” அடித்துக் கொண்டு கிண்டல், கேலி பேசிக் கொண்டு வலம் வருவோம்.

அப்படியான ஒரு திருவிழாவிற்கு தேவதை தரிசனத்திற்காக எங்கள் வாகனம் இறகு இல்லா குதிரையாக கோவிலை நோக்கி பறந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் கோவிலை அடைந்த நாங்கள் தற்காலிகமாக வயலில் போட்டிருந்த சைக்கிள் ஸ்டேண்டில் ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு கோவில் பின்னால் உள்ள வாய்க்கால் நீரில் கை,கால் முகம் கழுவி களைப்பை போக்கிக் கொண்டு, கையோடு கொண்டு வந்திருந்த பாண்ட்ஸ் பவுடர் கொட்டி வந்த பொட்டலத்தைப் பிரித்து முகத்துக்கு கொஞ்சம் தீற்றி அழகு படுத்திக் கொண்டு பிரகாரத்துக்குள் நுழைந்தோம்.

நீண்ட வரிசையில் இருந்த மக்களிடையே நாங்களும் நின்ற போதுதான் எங்களுக்கு முன்னால் சில தேவதைகள் நின்று கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களை சைட்டடித்தபடியே நின்று கொண்டோம். அதில் ஒருத்தி கிளிப் பச்சை நிற தாவணியில் மாநிறமாக நல்ல வட்ட முகம், ஒத்தை பொட்டு மூக்குத்தி, ஸ்டிக்கர் பொட்டு, கரிய நீண்ட கூந்தல், அதில் வைத்திருந்த முல்லைப்பூ, காலில் இருந்த கொலுசு, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள், ஒரு மயக்கமாக இனிமையான குரலில் பேசிக் கொண்டிருக்க பூ வாசமும் என்னைக் கிறங்கடிக்க நான் அம்மனை மறந்து இந்த தேவதையை ரசித்துக் கொண்டிருந்தேன்.

பேசிக் கொண்டேயிருந்தவள் ஏதோச்சசையாக எங்கள் பக்கம் பார்க்க...நான் கண் புருவத்தை மட்டும் அசைத்து என்ன....? என்றேன். சைகையில் அவள் ஒரு நிமிடம் என்னை முறைத்து விட்டு தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

அம்மன் தரிசனம் முடிந்து அப்படியே திருவிழா கடைப்பக்கம் ஒரு சுற்று வந்தோம், “மாப்ள சாமி பித்தளைக் காப்பு வாங்கனும்டா...“ என்றான் கதிரு! அப்படியே வந்த போது ஒரு வளையல் கடையில் காப்பு இருக்க அந்த கடைக்கு செல்ல அங்கே ஏற்கனேவே பிரகாரத்தில் பார்த்த மாநிற தேவதை கூட்டம் பத்து ரூபாய் வளையலை தங்கள் காது தொங்கட்டான் அசைய.....அசைய....இரண்டு ரூபாய்க்கு பேரம் பேசிக் கொண்டிருந்தது. 

கதிரு காப்பை வாங்கிக் கொண்டிருக்க ஒரு வளையலை எடுத்து கையில் மாட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தேவதை என்னைப் பார்க்க நான் குறும்பாக சிரித்தபடி வளையல் நல்லாயிருக்கு..! என்று “சூப்பர்“ என்று சைகை காட்டினேன், உதட்டை சுழித்து பழிப்புக் காட்டிய தேவதை இந்த வளையல் நல்லாவேயில்லை என்று வளையல்காரனிடம் திருப்பிக் கொடுத்து விட்டாள், எனக்கு ஒரு மாதிரியாக போய்விட “வாடா மாப்ள போகலாம்“ என்று கச்சேரி நடக்கும் திடலில் போய் உக்காந்து கொண்டோம். கதிரு வேறு பயந்தான் “பாத்துடா மாப்ள பிரச்சனையாகிறப் போவுது....“என்றான். “டேய் சும்மா வாடா நான் என்ன கையப்புடிச்சா இழுத்தேன்....! ஒன்னும் பிரச்சனையாகாது வா“ என்றேன்.

பாடகர்கள் டொயிங் டொயிங் என்று இசைக்கருவிகளை சோதனை செய்து வினாயகர் பாடலில் இருந்து ஆரம்பித்தார்கள், இரண்டாவது பாடலாக எல்.ஆர்.ஈஸ்வரி அம்மன் பாடல் பாட கூட்டம் கூடத் தொடங்கியது, எங்களுக்கு அருகில் மட்டும் கொஞ்சம் இடம் காலியாக இருக்க அந்த தேவதைகள் கூட்டம் வேறு வழியில்லாமல் கையோடு கொண்டு வந்திருந்த துண்டை விரித்து அதில் தாவணி அழுக்குப் படாமல் உக்கார்ந்தனர். நான் ஏதோச்சையாக பார்ப்பது போல மாநிற தேவதையைப் பார்க்க அவள் கையில் வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்த வளையல் அணிந்திருந்தாள்.

அட்ரா சக்க....! என்றபடி அவள் பார்க்கட்டும் இந்தப்பக்கம் என்று காத்திருந்தேன். அவளும் என் பக்கம் பார்க்க நான் சைகையால் வளையலைக் காட்டி என்ன...? என்றேன்...! அவள் படக்கென்று திரும்பி அவள் தோழியிடம் என்னைப் பற்றி காதில் கிசுகிசுத்தாள்! அந்த தோழி என்னை பார்த்தாள். நான் நல்லவன் மாதிரி மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த தேவதைக் கூட்டம் வீட்டிலிருந்து கொண்டு வந்தார்களோ...!இல்லை இங்கே வாங்கினார்களோ...! தெரியவில்லை பொரிஉருண்டை, கடலை மிட்டாய், முறுக்கு என்று தின்பண்டங்களை சாப்பிட்ட ஆரம்பித்தார்கள். அதைப்பார்த்த கதிரு “வாடா நாமளும் எதாவது வாங்கிட்டு வரலாம்!“ என்று கூப்பிட நானும் சென்று கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கி வருகையில் கதிரு “டேய் மாப்ள விடிய....விடிய...உக்காந்து பாக்கப் போறோம் தண்ணி தவிக்கும், தண்ணி கொண்டு போயிறலாம்..“ என்றான், “எப்பர்ரா கொண்டு போறது நம்மகிட்ட ஒன்னுமில்லையேடா...?“ என்றேன், “அதுக்கே மாப்ள கவலப்படுறே...!“ என்ற கதிர் பொங்கல் வைக்க வந்தவர்களின் கூட்டு வண்டி ஒன்று நிற்க வண்டிக்காரன் மாடுகளை அவிழ்த்து வண்டியில் கட்டிவிட்டு போதையில் கிடந்தான்! அந்த வண்டியில் இருந்த ஒரு ரப்பர் குடத்தை எடுத்தான் கோவில் பின்புறமுள்ள வாய்க்காலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு பக்கத்தில் வைத்தபடி கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தோம்.

தேவதைக் கூட்டங்களில் அவளை அடிக்கடி நானும் ரசித்துக் கொண்டிருக்க, தின்பண்டங்களை உண்டு முடித்த அவர்களுக்கு அடுத்ததாக தண்ணீர்த் தாகம் எடுக்க....! எங்களிடமிருந்த தண்ணீர் குடத்தையும் அதை நாங்க மோந்து குடிப்பதையும் பார்த்து நீண்ட தயக்கங்களுக்கு பிறகு தண்ணீர் கேட்டார்கள் நாங்களும் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க மெதுவாக அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

“நீங்க எந்த ஊருங்க....“என்றேன்!

“ஏங்க....?எதுக்கு கேட்குறீங்க.....?“என்றாள்!

“இல்லை...! உங்களை எங்கியோ பாத்திருக்கிறேன் அப்படின்னு வழக்கமான பசங்க கோடிங்க பயண்படுத்த...!“

“நாங்க நம்பியூர்ங்க...நீங்க....எந்த ஊர்ங்க“ என்றாள்....!

நாங்க எங்க ஊர்ப் பேரைச் சொல்ல....!

ஒரு சில மணி நேரம் மொளத்திற்கு பிறகு நான் கேட்டேன் “உங்க பேரைச் சொல்ல முடியுமா...? படிக்கிறீங்களா...?“ என்றேன்!

“பன்னெண்டாவது படிக்கிறேன் என் பேரு சுமதி, இவ பேரு ராதிகா, இவபேரு குமாரி, அவ பேரு ராஜி“ என்று அனைவரின் பெயரையும் சொல்ல நாங்களும் எங்க பேரைச் சொல்லி விட்டு நான் கேட்டேன் “நான் வளையல் நல்லாயிருக்குன்னு சொன்னேன் வேண்டாமின்னுட்டு மறுபடியும் அதே வளையல் வாங்கிட்டு வந்திருக்கிங்க என்றேன்..!“

அவள் எதுவும் சொல்லலை திரும்பி மேடையைப் பார்க்க எனக்கு அட கொஞ்சம் அவசரப்பட்டுட்டமோ....! தப்பா நினைச்சுட்டாளோ என்று பயப்பட ஆரம்பித்தேன் அடுத்தது எப்படிப் பேச்சக் கொடுக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

“நீங்க என்னை தப்பா நினைச்சுட்டிங்க போல........உங்களுக்கு உங்க அழகுக்கு இந்த வளையல் ரொம்ம அழகா இருக்கு சொல்லனும்ன்னு தோணுச்சு அதான் சைகை காட்டினேன்“ என்றேன்.

இந்த பொண்ணுகளை புரிஞ்சுக்கவே முடியாது! தன்னை அழகுன்னு சொல்லிட்டாப் போதும் உருகிடுவாங்க...போல அவள் முகம் பிரகாசமடைந்தது “தேங்ஸ்ங்க“ அப்படின்னாள் அவள் முகம் முழுவதும் வெட்கமும், பெருமையும் அவள் போட்டிருந்த பவுடரைத் தண்டி மினுமினுத்தது! ஆனால் உண்மையில் அவள் போட்டிருந்த பச்சை தாவணிக்கும் நீலக்கலர் வளையலுக்கும் எள்ளளவும் சம்மதமில்லை..!

உங்களுக்கு பிடிச்ச நடிகர், சாப்பாடு, அப்பா, அம்மா, எல்லா விசயங்களையும் பகிர்ந்து கொண்டு எதை..எதையோ பேச ஆரம்பித்தேன் சுமதியிடம். 

இந்த தேவதைகளிடம் பேசும் வரைக்கும்தான் மௌனிகள்! பேச ஆரம்பித்து நம் மேல் இவன் நல்லவன் என்கின்ற பிம்பமும் பதிந்து விட்டால் போதும் பேசிக்கிட்டே இருப்பாங்க. விடிய....விடிய....பேசிக்கிட்டே இருக்கின்றோம் இருவரும், கதிரும் மற்ற தேவதைகளுக்கு நடுவில் போய் அமர்ந்து கொண்டு எல்லாரையும் கலாய்ச்சிட்டு இருந்தான் எங்களை அந்த கூட்டம் தனியாக ஒதுக்கி விட்டது.

கச்சேரியில் என்ன பாடல் பாடினார்கள், யார் பாடினார்கள் என ஒன்று கூடத் தெரியாது எனக்கு! கச்சேரி முடிந்தது அதிகாலை மூணு மணிக்கு, கோயிலில் இருந்த கோபி பேருந்து நிலையம் வரை ஒரு கிலோ மீட்டர் நடக்கனும் நாங்களும் சைக்கிளை எடுத்துக் கொண்டு தள்ளிக் கொண்டே பேசிக் கொண்டு நடந்தோம். 

இரு புறமும் வயல்கள் நடுவில் இருக்கும் தார் ரோடு நிலா வெளிச்சம் அதிகாலைப் பனி வேறு, தேவதையுடன் பேசிக் கொண்டே நான் என நினைக்கையில் எனக்கே ஆச்சர்யமாகத்தானிருக்கி்னறது நான் எந்த பெண்களிடமும் இப்படிப் பேசியதில்லை ஒரு முறை தார் ரோட்டின் ஓரத்தில் நடந்து வந்தவள் ஒரு இடத்தில் தடுமாறிய போது உரிமையாக என் கரங்களை பற்றிக் கொண்டாள்! “டேய்...! நீ கொடுத்து வெச்சவன்டா...“ எனக் கத்தனும் போல இருந்தது!

பேருந்து நிலையத்தில் அவர்கள்  நம்பியூர் பேருந்து நிற்க ஏறிக் கொண்டார்கள், உங்க அட்ரஸ் கொடுங்க என்றாள் சுமதி! நானும் நடத்துனரிடம் பேனா வாங்கி ஒரு கீழே கிடந்த சிகரட் அட்டையைக் கிழித்து எழுதிக் கொடுத்தேன்! “எதுக்குங்க எங்க அட்ரஸ் என்றேன்.....! “ இல்ல என் பிரண்ட்ஸ்க்கு எல்லாம் பொங்கல் வாழத்து அனுப்புவேன் உங்களுக்கும் அனுப்பத்தான்.., வேண்டாம்ன்னா விடுங்க....நான் அனுப்பலை என்றாள்!“ ஆகா...!தேவதைகளிடம் இருந்து வாழத்தா...! நானா மறுப்பேன் “நானும் அனுப்பனும் உங்க அட்ரஸ் கொடுங்க“ என்றேன்..! “அய்யோ வேண்டாம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா கொண்ணே போடுவாங்க“ என்றாள்...! “நீங்க கவலைப் படாதிங்க நான் உங்க தோழி மாதிரி பெண் பெயரில் அனுப்புகின்றேன்“ என்றேன்! அவளும் கொடுத்தாள் பேருந்து கிளம்பியது, நாங்களும் கிளம்பினோம் ஜன்னல் வழியே கையை ஆட்டிய படியே விடை பெற்றாள்.

வரும் வழியில் பவானி ஆற்றில் குளிச்சிட்டுப் போகலாம் என கதிரு சொல்ல. இருவரும் ஆற்றுக்கு போகும் வழியில் சைக்கிளை விட்டோம், குளித்து முடித்து அவள் தந்த அட்ரஸை பார்த்துக் கொண்டிருந்தேன், குளித்து வந்த கதிரு “டேய் அவ கொடுத்தது பொய் அட்ரஸா இருக்குமடா“ என வாங்கி சட்டென்று கிழித்து ஆற்றில் போட்டு விட்டான். “போடா இவனே என்று நான் அவனை கெட்ட வார்த்தையில் திட்டினேன்.

“மாப்ள நாம யாருன்னு அந்த பொண்ணுக்கு தெரியுமா...? உண்மையான அட்ரஸ கண்டிப்பா கொடுக்க மாட்டாளுக....நீ அவளுக்கு கோவில் திருவிழாவில் ஒரு பேச்சுத் துணை அவ்வளவுதான் வீனா மனசை குழப்பிக்காதே“ என்றான் அவன் சொல்லுவதில்லும் உண்மை இருக்கின்றது...! எந்த பொண்ணு, அதுவும் கிராமத்துப் பொண்ணு பிறரை நம்பும் என்று என் மனதைச் அமைதிப் படுத்திக் கொண்டு சிறிது காலத்திற்குப் பிறகு அவளை பற்றிய சிந்தனையின்றி மறந்தே போய் விட்டேன்!

அதன் பிறகு திருப்பூர் வந்து பல வருடங்களுக்குப் பிறகு எங்க ஊருக்குப் போயிருந்த போது ஓட்டுநர் விண்ணப்பம் பெற என்னுடைய பள்ளி சான்றிதழ் ஒன்றைப் ஒரு பழைய மேஜையில் தேடிக் கொண்டிருந்தேன், அப்போது பிரிக்கப்படாத ஒரு பொங்கல் வாழ்த்து அட்டை ஒன்று இருந்தது “யாருடா இது அனுப்பியது அதுவும் நமக்கு“ என்று மனதில் நினைத்தபடி பிரித்தேன் அது சுமதி அனுப்பியது இரண்டு இதயமும் ஒரு பூவின் படமும் போட்ட வாழத்து அட்டையில் கீழே
I love you…….
Sumathi
என்று மட்டுமே இருந்தது அவள் கையெழுத்தில் அழகாக எழுதியிருந்தாள் ஆறு வருடங்களாகி விட்டது. இப்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவே இருப்பாள்….!

டேய்......! கதிரு நீ இதைப் படிப்பேன்னு நினைக்குறேன்! “நீயெல்லாம் நல்லாவே வருவடா……….!“
Sunday, January 13, 2013
Posted by வீடு சுரேஸ்குமார்

Popular Post

Blogger templates

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

Ads 468x60px

About Me

My Photo
I am Artist, Pencil Carver,Adope Illustrator,Adobe Photo Shop,CorelDraw Expert,Video Editing,GIF Animation Creater,Textile Designer 20year Experince 
and
kavithai,kathai Righting Blogger

உறவுகாரங்க...

Welcome to artveedu.com

இந்த பாமரனை பார்க்க வந்த நண்பர்கள்

பதிவுகள் அலமாரி!

நோம்பி வந்தா கடுதாசி போடுவோம்க...

Enter your email address:

Delivered by FeedBurner

Featured Posts

"நாளை...

- Copyright © வீடு -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -